ஷா ஆலம், டிச 30 – கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது நாட்டில் மொத்தம் 8,028 சாலை விபத்துகள் பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி தெரிவித்துள்ளார்.
இவை டிசம்பர் 22 முதல் 26 வரை, அதாவது கடந்த 5 நாட்களில் பதிவு செய்யப்பட்ட விபத்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த எண்ணிக்கை 75 மரண விபத்துகள், 29 கடுமையான காயங்கள் உட்படுத்திய விபத்துகள் மற்றும் 303 சிறிய காயங்களை உட்படுத்திய விபத்துகளையும் உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சிய 7,621 விபத்துகள் வாகனங்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய மற்றும் சிறிய மோதல்களை ஏற்படுத்திய சம்பவங்களாகும்.
இக்காலகட்டத்தில் 9.8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக PLUS நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் பயணித்திருப்பதாக பதிவாகியிருக்கிறது.
இந்த விடுமுறை காலத்தில், நாட்டில் நெரிசல் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் காவல்துறையினரால் ஓப்ஸ் லஞ்சார் ‘Ops Lancar’ மேற்கொள்ளப்பட்டதாகவும் முகமட் அஸ்மான் குறிப்பிட்டார்.