கோலாலம்பூர், டிச 19 – ஊராட்சி மன்ற தேர்தலைவிட மற்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார்.
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையை தாம் ஒதுக்கவில்லையென அவர் கூறினார். ஆனால், அதைவிட மக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விவகாரங்களில் தாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.
கூட்டரசு பிரதேசத்தில் Strata எனப்படும் கட்டிடங்களுக்கான, சொத்துக்களுக்கான கூட்டு நிர்வாக அமைப்புகள் அல்லது நிர்வாக கழகங்களை அமைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என ஜாலிஹா தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து எந்தவொரு கலந்துரையாடல்களை நாம் நடத்துவதற்கு முன், அடிப்படை அம்சங்கள் அல்லது வசதிகள் குறித்த விவகாரங்களில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
ஊராட்சி மன்ற தேர்தல்களை அமல்படுத்துவதற்கு முன் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டியிருப்பதாக ஜாலிஹா தெரிவித்தார்.