கோலாலம்பூர், டிசம்பர் 14 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கிச் செல்லும் பாதையில், சுங்கை பூலோ நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதிக்கு அருகே, ஆறு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், டிரெய்லர் லோரி ஓட்டுனர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவ்விபத்து நேற்றிரவு மணி 9.58 வாக்கில் நிகழ்ந்தது.
காங்கிரிட் சுவர்களை ஏற்றியிருந்த லோரி, கொள்கலன் லோரியுடன், மைவி, ஹோண்டா சிட்டி கார்களும், ஹோண்டா HRV வாகனமும், மோதி விபத்துக்குள்ளாகின.
அவ்விபத்தில், காங்கிரிட் சுவர்களை ஏற்றியிருந்த 30 வயது டிரெய்லர் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின், நடவடிக்கை பிரிவு அதிகாரி அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டிருந்த அவரை, மாநில தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்த வேளை ; அவர் இறந்து விட்டதை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், 20 வயது மதிக்கத்தக்க, ஹோண்டா HRV வாகன ஓட்டுனரும் சிராய்ப்பு காயங்களுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.