கோலாலம்பூர், டிச 14 – மலேசியாவில் எந்தவொரு மாநிலங்களிலும் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷஹ்ரோம் தெரிவித்திருக்கிறார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே மக்களவையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என அவர் கூறினார்.
எனவே, அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நாடாளுமன்ற தொகுதிகள் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொகுதிகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் இல்லையென அவர் விவரித்தார்.
14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஆகக்கடைசியாக 2018ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடைபெற்றது. கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலுக்கு பின் நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது.
நாடாளுமன்றம் முழு தவணைக் காலத்திற்கு நீடித்தால் இயல்பாகவே 2027ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்றம் கலைந்துவிடும். சரவா மாநிலம் 12 புதிய நாடாளுமன்ற தொகுதிகளை பெறவிருப்பதாக PRS கூட்டணி தகவல்களை மேற்கொள்காட்டி அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகின.