ஜோர்ஜ் டவுன் , ஜன 22 – பினாங்கில் இவ்வாண்டு நடைபெறும் மூன்று நாள் தைப்பூசக் கொண்டாட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு ஒற்றுமை தைப்பூசத்தில் இரண்டு இரதங்களும் ஒன்றினைந்து ஊர்வலத்தில் பங்கேற்பதால் பக்தர்களை பெரும் அளவில் ஈர்க்கும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் R.S.N ராயர் தெரிவித்தார்.
தைப்பூசம் இந்துக்களை மட்டுமின்றி சீன சமூக பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளதாக அவர் கூறினார். பலர் தைப்பூச கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பூஜைகளிலும் கலந்துகெள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு பினாங்கு தீவில் தைப்பூசத்தின்போது 150 பந்தல்கள் போடப்படவுள்ளதோடு 3,000 முதல் 4,000 பேர் காவடிகளை எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் என நேற்று ஜாலான் பூங்காவிலுள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ராயர் கூறினார்.