கிள்ளான், டிச 11 – 6 வயது சிறுவன் சைய்ன் ரயான் (Zayn Rayyan) கொலையில் ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
சைய்ன் ரயான் கழுத்து நெறிக்கப்பட்டதற்காக அடையாளம் இருப்பது மற்றும் அச்சிறுவன் நடத்திய போராட்டத்தின்போது உடலில் ஏற்பட்ட காயத்தை பார்க்கையில் தனிப்பட்ட ஒரு நபர் மட்டுமே அவனது கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
போலீஸ் தரவுகள் உட்பட பல்வேறு கோணங்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா டாமாயில் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பலரிடம் விசாரணை செய்துள்ளோம். குற்றவாளியை கண்டு பிடிப்பதற்காக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம் என இன்று செய்தியாளர்களிடம் உசேய்ன் தகவல் தெரிவித்தார்.
சைய்ன் ரயான் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடை பகுதியில் நாங்கள் தேடியபோது அவனது உடல் இல்லை. ஆனால் அதே இடத்தில் இரவு வேளையில் தேடியபோது அச்சிறுவனின் உடலை நாங்கள் கண்டுப் பிடித்தோம்.
அன்று மாலையில் கடுமையான மழை பெய்தபோது கொலையாளி சைய்ன் ரயானின் உடலை அந்த இடத்தில் வீசியெறிந்திருக்கலாம் என ஹுசைன் தெரிவித்தார். கொலையாளி அச்சிறுவன் குடியிருந்த இடத்தில் இருப்பவரா அல்லது வெளியில் இருந்து வந்தவரா என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.