பினாங்கு மார்ச் 14 – சிலாங்கூர் மாநிலத்தில் கெர்லிங் நகரில் விரைவில் அமையவிருக்கும் சைவத் திருக்கோயில் மற்றும் கல்லூரித் திட்டத்தை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு வரவேற்றுள்ளார்.
சமயத்தின் மூலம் இளைய தலைமுறையினரை மேலும் பக்குவப்படுத்துவற்கு விவேகமான நடவடிக்கையாக சைவத் திருக்கோயில் மற்றும் கல்லூரித் திட்டம் அமைய முடியும் என அவர் கூறினார்.
அதோடு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நவீன காலத்தில், இந்துக்கள் தங்கள் மத நடவடிக்கைகளிலிருந்து விலகிக் செல்லும் இவ்வேளையில் சைவ திருக்கோயிலை அமைக்கும் திட்டத்தை முன்வந்த மலேசிய சைவ சமய மன்றத்திற்கு அவர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்து சமயம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கும் , இந்து சமயம் மேலோங்கி நிற்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிகைகையாக இத்திட்டம் உதவ முடியும் என அவர் கூறினார்.
மாணவர்களிடையே சிறந்த சமய புரிதலையும் நற்பண்புகளையும் வளர்க்கத் தமிழ்ப்பள்ளிகள் இந்து சமயம் குறித்த சிறப்பு வகுப்புகள் மற்றும் திட்டங்களையும் மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் சுந்தரராஜூ கேட்டுக்கொண்டார்.
மேலும் மாற்றுத் திறளாளி சிறார்களுக்கு வசதியாக பினாங்கு மாநிலத்தில் சிறப்பு கல்விக்கான தமிழ்ப்பள்ளியை அமைப்பதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் குழுவின் தலைவருமான சுந்தரராஜூ தெரிவித்தார்.
இந்த சிறப்பு பள்ளி அமைக்கப்பட்டால் இந்திய சமூகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தமிழ் மொழியில் தொடக்க கல்வியை மேற்கொள்ள முடியும்.
இத்திட்டத்தை அமல்படுத்தும்படி கல்வி அமைச்சிற்கு தாம் முன்மொழிய விருப்பதாகவும் அவர் கூறினார்.