கோலாலாம்பூர், டிச 16 – அரசியல் மாற்றத்தின் காரணமாக நாட்டில் தொடர்ந்து மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக வருவார் என்பதில் உறுதியில்லையென பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.
15ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெறமுடியவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு கூட்டணியும் தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாத சூழ்நிலை உருவானதால் யார் பிரதமராகுவது என்பதில் பேச்சு நடத்த வேண்டியுள்ளது. அதோடு கட்சி தாவலை தடுக்கும் சட்டம் இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியின் முடிவை ஆதரிக்க வேண்டும் என முஹிடின் கூறினார்.
எனவே, எதிர்காலத்தில் கட்சித் தலைவர் அல்லது எதாவது காரணத்திற்காக மலாய்க்காரர் அல்லாத ஒருவருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவு செய்தால் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை ஏற்கவேண்டும்.
அந்த முடிவை ஏற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படலாம் . இதனால், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை காலி செய்யவேண்டும் என்பதோடு இழப்பீடை வழங்க வேண்டும் .
எனவே, மலாய்க்காரர் அல்லாதார் பிரதமர் பதவியை ஏற்கும் சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மலாய்க்காரர்கள் ஒன்றும் செய்யமுடியாது என பெர்சத்து கட்சியின் தலைவருமான முஹிடின் யாசின் தெரிவித்தார்.