கோலலாலம்பூர், மார்ச் 4 – 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை இணைய மோசடி திட்டங்களினால் 3.2 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு துணையமைச்சர் M. Kulasegaran தெரிவித்திருக்கிறார். 107,716 மோசடி சம்பவங்களை இந்த இழப்பு உள்ளடக்கியிருப்பதாகவும் இந்த விவகாரத்தை துடைத்தொழிப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இணைய மோசடி சம்பவங்களை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் குலசேகரன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் NSRC எனப்படும் மோசடிக்கு எதிரான தேசிய நடவடிக்கை மையம் அமைக்கப்பட்டதோடு 997 என்ற தொலைபேசி சேவையும் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மோசடி முதலீடுகளை துடைத்தொழிப்பதற்காக போலீஸ், Bank Negara Malaysia , MCMC எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், தேசிய நிதிமோசடி எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் தொலைதொடர் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒத்துழைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. மோசடி நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் 131 தொலைபேசி எண்கள் துண்டிக்கப்பட்டதோடு 93 இதர இணைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.