கோலாலம்பூர், ஜன 7 – நம்மில் பலருக்கும் ஏர் ஏசியா ஒரு விமான நிறுவனமாக மட்டும் தான் தெரியும். ஆனால், அதன் தலைமையகமான RedQவில், கைவிடப்பட்ட நாய்களுக்கு இருப்பிடம் ஒன்று இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த இருப்பிடம் தான் DogQ.
இந்த இருப்பிடத்திற்கு பின்னணியில் இரண்டு ஏர் ஏசியா நிர்வாகிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர், அரசாங்க தொடர்புப் பிரிவுத் தலைவர் விஜய பிரியா ஆனந்தன் மற்றொருவர் மக்கள் மற்றும் கலாச்சாரப் பிரிவுத் தலைவர் ரேணுகா குணதேவன் ஆவர். இவர்கள் இருவரும்தான் முதலில் அந்த நாய் குட்டிகளைப் பார்த்துள்ளனர். தற்போது அந்த குட்டிகளுக்கு ஏழு வயது என்பது குறிப்பிடத்தக்கது.
‘KLIA 2யை சுற்றி கைவிடப்பட்ட நாய்களுக்குப், பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும் என ஏர் ஏசியா பணியளர்களின் முயற்சிதான் DogQ உருவானதற்கு அடித்தளக் காரணம் என்று வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது இந்த DogQ இருப்பிடத்தில் மொத்தம் நான்கு நாய்கள் உள்ளன. இவற்றுக்கு D7, AK, QZ மற்றும் FD என ஏர் ஏசியா விமானக் குறியீட்டு எழுத்துப்படி பெயரிடப்பட்டுள்ளன. இதில் FD எனும் நாய் புற்றுநோயால் மரணமடைந்து விட்டது.
இதனிடையே புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து, DogQ இருப்பிடத்தின் ஏழாவது நிறைவாண்டு நிகழ்ச்சியை ஏர் ஏசியா அண்மையில் ஏற்பாடு செய்து மகிழ்ச்சியோடு கொண்டாடியது.