காஸா முனை, நவ 6 – காஸா முனையிலுள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவத்தினரின் மோசமான தாக்குதல்கள் தொடர்வதாக ஹமாஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டினர். நேற்று மாலையிலும் அந்த தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் காஸா முனையின் வட பகுதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேல் படைகளின் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தலைவர் சலாமா மரூஃப் தெரிவித்தார். பாலஸ்தீன பிரதேசத்திலுள்ள மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இஸ்ரேல் தாக்குதலில் அதிகமான பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 9,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.