கோலாலம்பூர், மார்ச் 1 – KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களே, அதன் சேவையில் ஏற்பட்டுள்ள பலவீனத்திற்கு முக்கிய காரணம் என, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணையமைச்சர் கைருல் பிர்டாவுஸ் அக்பார் கான் கூறியுள்ளார்.
வணிகப் பயணிகளின் அனுபவங்களின் அடிப்படையில், ஆசியாவின் எட்டாவது மோசமான விமான நிலையமாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை Businessfinancing.co.uk எனும் இணையத்தளம் பட்டியல் இட்டுள்ளது தொடர்பில், கைருல் அவ்வாறு கருத்துரைத்தார்.
KLIA நிர்வாகத்தால் ஏற்கனவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான தொடர் முயற்சிகள் நடைபெற்று வருவதையும் நாம் அறிவோம்.
இருந்த போதிலும், சிறந்த சேவையை வழங்காத விமான நிலையங்களில் ஒன்றாக KLIA வகைப்படுத்தப்பட்டுள்ளதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதன் வாயிலாக கண்டறியப்படும் பலவீனங்களை ஒப்புக் கொண்டு, மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கைருல் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சேவையில் காணப்படும் பலவீனங்களை ஒப்புக் கொண்டு, அதனை அவ்வப்போது சீர் செய்யும் முயற்சிகளை KLIA நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென கைருல் வலியுறுத்தியுள்ளார்.