சிம்மோர் கந்தனில் எழுந்தருளியுள்ள கல்லுமலை மகா காளியம்மன் ஆலயத்தின் பதிவு ரத்துச் செய்யப்பட்டது முதல் அதனை பராமரிக்கும்படி பேரா திவால்துறை கேட்டுக் கொண்டதால் 2011ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பராமரித்து வந்தோம் என அந்த ஆலயத்தின் முன்னாள் செயலாளர் ஸ்ரீ ராம் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். திவால் துறையின் ஆலோசனைக்கு ஏற்ப முனியாண்டி தலைமையில் ஆலய நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆலயத்தின் உண்டியல் பணத்தை பேரா திவால்துறை 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை எடுத்துச் சென்றுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பராமரிப்பு குழுவினர்தான் தங்களது முயற்சியில் உண்டியல் பணம் எதுவுமின்றி திருவிழா நடத்தி வந்துள்ளதாக ஸ்ரீ ராம் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே இம்மாதம் 9 ஆம் தேதி இந்த ஆலயத்திற்கு புதிதாக ஒருவரை தற்காலிக பராமரிப்பு குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு திவால்துறை ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் தற்காலிகமாக தியாகராஜன் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இதுகூட தற்காலிக ஏற்பாடு என்ற அடிப்படையில் ஆலய பாமரிப்புக்காக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக திவால் துறை எங்களிடம் தெரிவித்தனர். அந்த கூட்டத்திலும் நாங்கள் கலந்துகொண்டோம். இந்த நிலையில் பழைய நிர்வாகம் முறையாக செயல்படவில்லையென தியாகராஜன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என ஸ்ரீ ராம் ராமச்சந்திரன் கூறினார்.
இந்த ஆலயத்தில் 2023ஆம் ஆண்டுவரை ஆலய பராமரிப்பு குழுவினர் சொந்த பணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்களின் நன்கொடை மூலமாகவே ஆலய நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளனர். 2023 ஆம்ஆண்டு ஆலயத்தின் திருவிழாவின்போது நீர் கசிவினால் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டது. அப்போதுகூட அரசாங்கத்தின் எந்தவொரு பணமும் இன்றி சொந்த முயற்சியில் இந்த ஆலயத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு வேலைகளை நடத்தியிருக்கிறோம். எனவே திவால் துறை இந்த ஆலயத்தின் பரமாரிப்பை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் சிறப்பான முறையில் நடத்தி வந்தது என்பதே உண்மை என ஸ்ரீ ராம் ராமச்சந்திரன் விளக்கினார்.