கோலாலம்பூர், நவ 1 – வேலையிழந்த இருவர் போலி பண நோட்டுக்களை அச்சடித்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். கோலாத்திரெங்கானுவில் வாடகை அடுக்கு மாடி வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்ட போலீஸ் குழுவினர் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல்வேறு சீரியல் எண்களைக் கொண்ட சுமார் 27 போலி 100 ரிங்கிட் தாள்களை பறிமுதல் செய்ததாக திரங்கானு போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார். மேலும் இரண்டு கை தொலைபேசிகள், மடிக்கணினி, புரோட்டோன் சாகா கார் மற்றும் போலி பண நோட்டுகளை அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த சந்தேகப் பேர்வழிகள் வலைஒளி (YouTube) மூலம் போலி பண நோட்டுக்களை அச்சடிப்பதை தெரிந்துகொண்டனர். தங்களது தினசரி செலவுகளுக்காக 100 ரிங்கிட் போலி நோட்டுக்களை மட்டுமே அச்சடித்து அதனை பயன்படுத்தி வந்ததாக மஸ்லி மஸ்லான் கூறினார். உண்மையான ரிங்கிட் ரொக்கத்தை பெறுவதற்காக அந்த இருவரும் டுங்குன் வட்டாரத்தில் உள்ள கடைகளில் போலி பண நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்தியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகரெட்டுகள் வாங்குவதற்கும் கருப்பு சந்தையில் வர்த்தகர்களை ஏமாற்றி போதைப் பொருள் வாங்குவற்கும் அவர்கள் அந்த போலி நோட்டுக்களை பயன்படுத்தியுள்ளதாக மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்