கோலாலம்பூர், ஜனவரி 17 – மூன்று வயது சிறுவனின் கால் முறியும் அளவுக்கு துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும், அந்நிய நாட்டு பெண் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இம்மாதம் எட்டாம் தேதி, அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் போலீஸ் புகார் செய்வதற்கு முன், அப்பெண் தப்பி ஓடி விட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
அப்பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், போலீஸ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு விட்டதையும் அலாவுதின் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, இம்மாதம் 11-ஆம் தேதி, அந்நிய நாட்டு பெண் பராமரிப்பாளரால், மூன்று வயது சிறுவன் ஒருவன், கடித்து, கிள்ளி, அடித்து காயப்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நச்சுணவால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன், சிகிச்சைகாக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவன் கால் முறிவுக்கு இலக்காகி இருந்ததும், உடலில் சித்ரவதைக்கு இலக்கான அறிகுறிகள் தென்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
அதனை தொடர்ந்து, அந்த அந்நிய நாட்டு பெண் தலைமறைவானதால், அச்சிறுவனின் தாயார் போலீஸ் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.