கோலாலம்பூர், நவ 23 – தேசிய மற்றும் மாநில நிர்வாகங்களிலிருந்து இஸ்லாத்தை பிரிக்கும் வகையில் மலேசியா மதச்சார்பற்ற நாடாக, உருவாக வாய்ப்பில்லை என கூறியிருக்கிறார் அசிரஃப் வாஜ்டி டுசுகி.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் நிர்வாகத்தை மதச்சார்பற்ற வகையில், கொண்டு செல்ல முற்பட்டு செயப்லடுவதாக பாஸ் தலைவர்கள் கூறிவருவது பொய் என கூறினார் அசிரஃப்.
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக, இஸ்லாத்தை நிலைநிறுத்த அம்னோ பாடுபட்டுள்ளது. அதனை மாற்ற வேண்டும் என்றால் மக்களவையில் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையில் மட்டுமெ செய்ய முடியும்.
அவ்வாறு செய்வதற்கு அம்னோ, அமனா மற்றும் PKRன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டாள்கள் அல்ல என்றார் அவர்.
கெமாமான் இடைத்தேர்தலை ஒட்டி கெர்தேவில் நடந்த பிரச்சார கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசினார்.
மலாய் ஆட்சியாளர்களையும் தாண்டி, மலேசியாவை மதச் சார்பற்ற நாடாக மாற்ற முடியாது என்பதால் பாஸ் மக்களை ஏமாற்றும் வேலையை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.