பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6 – 27 முறை கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்த உணவு வியாபாரியின், மூன்று நெருங்கிய நண்பர்கள், இம்மாதம் எட்டாம் தேதி வரையில், மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இரு ஆடவர்களும், பெண் ஒருவரும், நேற்றிரவு மணி 7.30 வாக்கில், ஜெலுதோங்கில் கைதுச் செய்யப்பட்டதை, திமோர் லாவுட் இடைக்கால போலீஸ் தலைவர் வி.சரவணன் உறுதிப்படுத்தினார்.
29 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும், குற்றவியல் சட்டத்தின் 302 பிரிவின் கீழ், கொலை குற்றத்திற்காக விசாரிக்கப்படுவார்கள் எனவும் சரவணன் சொன்னார்.
நேற்று, ஜார்ச் டவுன், ஜாலான் பேராக்கிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பின், கார் நிறுத்துமிடத்தில், ஜாலான் பேராக் சந்தையின் உணவு வியாபாரி ஒருவர், உடலில் 27 கத்தி குத்துக் காயங்களுடன், இரத்த வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார்.
அந்த 60 வயது ஆடவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரை ஆடவன் ஒருவன் தாக்கிய வேளை; மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் காத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த கொலைக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.