கோலாலம்பூர், நவ 22 – கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அம்மாநிலத்தில் வெள்ளத்தின் காரணமாக 21 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1,679 குடும்பங்களைச் சேர்ந்த 4,787 பேர் 32 நிவாரண முகாங்களில் தங்கியிருக்கின்றனர். நேற்றிரவு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 3,917 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர். இந்த எண்ணிக்கை இன்று காலையில் மேலும் உயர்ந்துள்ளது. திரெங்கானுவில் இப்போது டுங்குன் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்றிரவு புதிய நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிளந்தானில் இதுவரை 84 குடும்பங்களைச் சேர்ந்த 332 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பாசீர் பூத்தே, பாச்சோக் மற்றும் மாச்சாங் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியிருப்பதாக மாநில வெள்ள பேரிடர் நிர்வாக மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.