கோலாலம்பூர், மார்ச் 18 – நாடு முழுவதிலும் கடந்த ஆண்டு நிகழ்ந்த 34,497 மோசடி சம்பவங்களினால் 1.218 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட 12,851 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 352 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 10,358 குற்றச் செயல்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் நிகழ்ந்த மோசடி என புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்ததாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ‘Shamsul Anuar Nasarah’ தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு முதல் தேசிய மோசடி துடைத்தொழிப்பு மையத்தின் மூலம் 105 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பான 6,434 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த தொகையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோரின் பணத்தை மீட்பதற்குள் 17.5 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டதோடு 178, 407 ரிங்கிட் பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்ப ஒப்படைக்கப்பட்டதாக இன்று மேலவையில் ‘Shamsul Anuar’ விவரித்தார்.
பண மோசடியில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக அமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
இணையத்தின் மூலம் நடைபெற்றுவரும மோசடி செயல்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.