ஈப்போ, பிப் 6 – ஈப்போவில் , ஜாலான் தஞ்ஜோங் ரம்புத்தான் – செமோர் சாலையில் ஜூனியர் போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயன்றதன் தொடர்பில் இருவரை போலீசார் கைது செய்தனர். 33 வயதுடைய ஆடவரும் 34 வயதுடைய பெண்ணும் நேற்று கைது செய்யப்பட்டதாக ஈப்போ OCPD அசிஸ்டன்ட் கமிஷனர் யஹாயா ஹாசன் தெரிவித்தார். மேலும் அந்த சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த சம்பவத்தின்போது 34 வயதுடைய அந்த போலீஸ்காரர் விலா எலும்பு மற்றும் தோள்பட்டையில் காயத்திற்கு உள்ளானார்.
வழக்கமாக மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அந்த காரை நிறுத்த முயன்றபோது அக்காரின் ஓட்டுனர் திடீரென காரை பின்னால் நகர்த்தி அந்த போலீஸ்காரரை மோதினார். முதலில் இந்த சம்பவத்தை விபத்து என அந்த போலீஸ்காரர் நினைத்தார். அந்த கார் ஓட்டுனர் மீண்டும் தமது காரை முன்னால் கொண்டுச் சென்று பிறகு இரண்டாவது முறையாகவும் அக்காரை பின்னால் நகர்த்தி போலீஸ்காரரை மோதினார். அதன் பின் அவர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து அந்த கார் ஓட்டுனரையும் அதில் இருந்த பெண்ணையும் தேடிய போலீசார் அவர்களை கைது செய்தனர்.