பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 10 – நாட்டிலுள்ள அந்நிய தொழிலாளர்களுக்காக, விபச்சார விடுதிகள் அவசியம் செயல்பட வேண்டும் எனும் சர்ச்சை கருத்தை வெளியிட்டதால், கடும் கண்டனத்துக்கு இலக்கான நடிகரும், தொழிலதிபருமான ரோஸ்யாம் நோர், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது அந்த கூற்று வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தும் என கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை எனவும் ரோஸ்யாம் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை பொதுமக்கள் முதலில் முழுமையாக பார்க்க வேண்டும். அதன் பின்னரே, சரியான மதிப்பீட்டை அவர்கள் செய்ய வேண்டும் எனவும், 57 வயது முஹமட் நோர் சம்சுடின் எனும் ரோஸ்யாம் நோர் தெரிவித்துள்ளார்.
டெலிகிராமில் “ஹிதாம் பூத்தே கேஹிடுபான்” போட்காஸ்சில் பங்கேற்ற ரோஸ்யாம், அந்நிய தொழிலாளர்களின் நலன் பேணவும், அவர்கள் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், நாட்டில் விபச்சார விடுதிகள் இருப்பது அவசியம் என கூறியதை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.
ரோஸ்யாமின் அந்த கூற்று, பெண்களை சிறுமைப்படுத்தும் ஒரு செயல் என மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி நாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.