கோல சிலாங்கூர், பிப் 27- சிலாங்கூரில் உள்ள நூற்றுக்கணக்கான சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஆயுள் காலம் காலாவதியானவையாக உள்ளன. ஒரு சாலையின் ஆயுள் காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே இருப்பதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Izham Hashim தெரிவித்தார்.
மக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை சரிசெய்வதை மட்டுமின்றி இதர அனைத்து அம்சங்களையும் இந்த சீரமைப்பு பணி உள்ளடக்கியிருக்கும் என்று அவர் கூறினார்.
சாலைகளின் தரம் உயர்த்தும் பணிக்காக மாநில அரசு ஆண்டுதோறும் ஒரு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியைக் கொண்டு சாலை கட்டமைப்பை தரம் உயர்த்த மட்டுமே முடியும். இதர அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கீடு போதாது என்று அவர் சொன்னார்.
உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு மோசமான நிலையில் உள்ள சாலைகளின் பட்டியலை தாங்கள் தயாரித்து வருவதாக நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் Izham Hashim தெரிவித்தார்.