குவா மூசாங், டிச 15 – கேமரன் மலையிலிருந்து கோலாத் திரெங்கானுவிற்கு தங்களது காரில் பயணம் செய்த நால்வர் ஜாலான் குவா மூசாங் – லோஜிங் சாலையில் மலாயா புலியை கண்டது மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளனர்.
கேமரன் மலையில் பயிற்சியில் கலந்துகொண்டு விட்டு வியாழக்கிழமையன்று திரும்பியபோது மாலை மணி 3.15 அளவில் புதரிலிருந்து வெளியேறிய புலி சாலையில் நடந்து சென்றதாக 44 வயதுடைய நோரா ஹையு ரஷீத் தெரிவித்தார்.
நாங்கள் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து புகைப்படம் எடுத்தோம் . 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்த புலி மீண்டும் புதர் பகுதிக்குள் சென்று விட்டதாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அந்த புலி மெலிந்து காணப்பட்டதோடு அதன் கால்கள் காயம் அடைந்திருப்பதற்கு அறிகுறியாக அது தாங்கி தாங்கி நடந்தது. இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையிடம் தெரிவித்துள்ளதாக நோரா ஹையு ரஷீத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அறிந்ததும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வன விலங்கு அதிகாரிகள் சென்றதோடு அங்கு தொடர்ந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம் என கிளந்தான் வனவிலங்கு மற்றும் பூங்கா துறையின் இயக்குனர் முகமது ஹபீட் ரோஹானி தெரிவித்தார்.