ஜோகூர் பாரு, ஜன 9- ஜோகூர் பாருவிலுள்ள வர்த்தக நிலையத்தில் சட்டவிரோத தொழிலாளர்களை வைத்திருந்ததற்காக நேற்று சோதனை நடத்தப்பட்ட உடம்புப்பிடி மற்றும் அழகு நிலையம் ஒரு மாதத்திற்கு 4.2 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை பெறுவதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்திருக்கிறார். ஒரு ஆண்டாக செயல்பட்டுவரும் அந்த நிலையம் தினசரி சராசரி 140,000 ரிங்கிட் பெறுவதாகவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் 39 பெண்கள் உட்பட 19 மற்றும் 42 வயதுடைய 67 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அந்த மையத்தை கவனித்து வந்த உள்நாட்டைச் சேர்ந்த 51 வயது ஆடவர் மற்றும் 32 வயதுடைய வியாட்னாம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாதத்திற்கு 1,500 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட்வரை வருமானம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்களான மியன்மாரைச் சேர்ந்த 34 பேர், 16 வியட்னாமியர்கள், 14 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்சைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சமூக வருகை பாஸ்கள் மற்றும் மற்ற முதலாளிகள் பெயரில் பதிவான தற்காலிக வேலை அனுமதி பாஸ்களை பயன்படுத்தி வெளிநாட்டினர் வேலை செய்து வந்ததாகவும் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.