கோலாலம்பூர், நவ 6- தங்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மட்டம் போடுவது அல்லது அக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தவறியதற்கான காரணத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாக மூடா கட்சியின் தலைவர் சாயிட் சாடிக் சாயிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு வரத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துலின் ஆலோசனையை தாம் வரவேற்பதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சாயிட் சாடிக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அலவன்ஸ் மக்களால் வழங்கப்படுபவை. மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று வாதிப்பதற்காகத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் வெட்டியாக சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கக்கூடாது என சாயிட் சாடிக் வலியுறுத்தினார். சிலர் 100 விழுக்காடு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதும் இன்னும் சிலர் காரணம் இன்றி நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மட்டம் போடுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.