கோலாலம்பூர், டிச 21 – மலேசியாவின் வளர்ந்துவரும் இளம் பில்லியர்ட் விளையாட்டாளரான 13 வயதுடைய அஃபிக் சைபுல் பஹாரி இன்று அதிகாலை மணி 2.50 அளவில் நெகிரி செம்பிலான், சிராம்பானில் லேகாஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணம் செய்த ஹோண்டா சிட்டி கார் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதால் அவர் இறந்தார் என சிரம்பான் போலீஸ் தலைவர் அரிபாய் தாராவே தெரிவித்தார். நான்கு இதர பயணிகளுடன் அந்த காரை ஓட்டிய 21 வயது இளைஞர், நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அக்கார் கால்வாயில் விழுந்தது. அக்காரில் இருந்து அஃபிக் சைபுல் பஹாரி விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என அரிபாய் தாராவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
காயம் அடைந்த இதர பயணிகள் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். நெகிரி செம்பிலான் செனவாங்கில் நடைபெற்ற பில்லியர்ட் போட்டியில் கலந்துகொண்ட பின், கோலாலம்பூரில் உள்ள தமது வீட்டிற்கு சென்றபோது அஃபிக் விபத்துக்குள்ளானதாக பில்லியர்ட் விளையாட்டில் அவருக்கு முக்கிய ஊக்குவிப்பாளராக விளங்கிய ஃபர்ஹான் அலியாஸ் தெரிவித்தார்.