கோலாலம்பூர் , பிப் 5 – இந்திரா காந்தியின் மகள் கடத்தப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிடுவானை கைது செய்யும் நீதிமன்ற உத்தரவு குறித்து நடவடிக்கை எடுப்பதில் போலீஸ் அதிக தாமதத்தை எடுத்துக்கொண்டதை போலீஸ் படையின் முன்னால் தலைவர் அப்துல் ஹமிட் படோர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். முகமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் தலைவர்களுக்கும் தெரிவிப்பதற்கு எட்டு மாதங்கள் பிடித்ததாகவும் இது உண்மையில் அதிகமான காலகட்டம் என்பதை இந்திரா காந்தியின் வழக்கறிஞர் சச்ப்ரீத்ராஜ் சிங் சோஹன்பால் குறுக்கு விசாரணை செய்தபோது அப்துல் ஹமிட் ஒப்புக்கொண்டார். போலீஸ் படையின் முன்னாள் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவை சமர்பிப்பதற்கு எட்டு மாதம் எடுத்துக்கொண்டது மிகப் பெரிய கால அவகாசம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த தாமதத்தினால் இதற்கு முன் முஸ்லிம் சமயத்தை தழுவிய இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிடுவான் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதையும் ஹமிட் படோர் ஒப்புக் கொண்டார். தனது மகளை கடத்திச் சென்ற முகமட் ரிடுவானை கைது செய்யத் தவறியதற்காக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மற்றும் இதர மூவருக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்தபோது அப்துல் ஹமிட் இதனை தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close