கோம்பாக், ஜனவரி 1 – காரக் நெடுஞ்சாலையில், முந்திச் செல்ல முற்பட்ட டொயோட்டா கேம்ரி காரால், புரோடுவா அருஸ் வாகனம் ஒன்று லோரியை மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை மணி மூன்று வாக்கில், அவ்விபத்து தொடர்பான 33 வினாடி காணொளி ஒன்று வைரலாகியுள்ளதை போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் அரிபின் முஹமட் நாசிர் தெரிவித்தார்.
நேற்று காலை மணி 10.11 வாக்கில், கெந்திங் செம்பா நோக்கி செல்லும், காராக் நெடுஞ்சாலையில், அவ்விபத்து நிகழ்ந்தது.
26 வயது உள்நாட்டு ஆடவர் ஒருவர் செலுத்திய அருஸ் வாகனத்தை கெம்ரி ஒன்று மோதித் தள்ளியது.
அதனால், அந்த அருஸ் கட்டுப்பாட்டை இழந்து இடது சாலையில் பயணித்த, 38 வயது ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற லோரியை மோதி விபத்துக்குள்ளானது.
கெம்ரி கார் திடீரென பாதையை மாற்றி, அருஸை முந்திச் செல்ல முற்பட்டதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.
எனினும், அவ்விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக, அந்த விபத்து தொடர்பான காணொளி முகநூலில் பரவலாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.