கோலாலம்பூர், நவ 28 – பட்டம் பெற்று வெளியேறிய ஆறு மாதங்களுக்குப் பிறகும் இன்னும் 29,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருந்துவருவதாக அண்மையில் உயர்க் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழில் துறையினர் அரசாங்கத்திற்கு கைகொடுக்க வேண்டுமென ம.சீ.ச இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் லிங் தியான் சூன் கேட்டுக்கொண்டார். உயர் கல்வி அமைச்சு வெளியிட்டிருக்கும் வேலையில்லாமல் இருந்துவரும் பட்டதாரிகளின் புள்ளி விவரம் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே வேலை சந்தையை சேர்ந்த அனைத்து தரப்பினரும் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த முறையில் பணியாற்ற வேண்டும் என லிங் தியான் சூன் தெரிவித்தார்.