டாக்கா, மார்ச் 1 – வங்காளதேசத்தில், ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 43 பேரின் உடல்கள், இரு வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதை, அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் உறுதிப்படுத்தியுள்ளார்.
மயக்கமடைந்த 42 பேர் உட்பட சுமார் 75 பேர் தீ ஏற்பட்ட கிரீன் காஸி பேரங்காடி கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, டாக்கா தீயணைப்பு மீட்புத் துறையும் கூறியுள்ளது.
உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு மணி 9.30-க்கு தீ பரவத் தொடங்கிய வேளை ; பனிரெண்டுக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீக்கிரையான அந்த பேரங்காடி கட்டடத்தில், உணவகம், மளிகை கடை உட்பட மேலும் சில கடைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.