சிக், ஜனவரி 15 – கெடா, சிக்கில், மரணத்தின் பிடியிலிருந்து ஆடவர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் பயணித்த புரோடுவா மைவி ரக மார், டிரெய்லர் அடியில் சிக்கி நசுங்கி போன போதும், அவர் காலில் மட்டுமே காயமடைந்ததே அதற்கு காரணமாகும்.
நேற்றிரவு மணி 10.55 வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது.
மரப்பலகைகளை ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி, புரோட்டோன் ஈஸ்வரா மற்றும் புரோடுவா மைவி என மூன்று வாகனங்களை அவ்விபத்து உட்படுத்தி இருந்ததை, சிக் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் ஜுல் கைரி மாட் தஞ்சில் உறுதிப்படுத்தினார்.
43 வயது ஆடவர் ஒருவர் செலுத்திய புரோடோன் ஈஸ்வரா கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் நுழைந்து டிரெய்லரை மோதி விபத்துள்ளானது.
அந்த டிரெய்லர் பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மைவி காரை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அதனால், டிரெய்லருக்கு அடியில் சிக்கிக் கொண்ட மைவி காரிலிருந்து, 20 வயது மதிக்கத்தக்க ஆடவரை, கடும் சவாலுக்கு மத்தியில் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் மீட்டதாக கூறப்படுகிறது.
அவ்விபத்தில் காயமடைந்த ஈஸ்வரா ஓட்டுனரும், மைவி ஓட்டுனரும் முறையே பாலிங் மற்றும் சிக் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.