சுங்கை பெட்டாணி, நவம்பர் 28 – கெடா, சுங்கை பெட்டாணி, தாமான் கெலாடியில், இ-ஹெய்லிங் ஓட்டுனர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 13 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.
எனினும், அந்த 65 வயது ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு, அந்த இளைஞனின் கையை கடிக்க முயன்றதால், பயத்தில் அவன் தப்பி ஓடி விட்டான்.
நேற்று மாலை மணி 5.43 வாக்கில், அந்த இளைஞனை தாமான் கெலாடியிலிருந்து பண்டார் ஸ்ரீ அஸ்தானா கொண்டு விடும் போது அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் இரவு மணி எட்டு வாக்கில் போலீஸ் புகார் செய்யப்பட்ட வேளை, இரண்டு மணி நேரத்தில் அந்த பதின்ம வயது இளைஞன் கைதுச் செய்யப்பட்டதை குவாலா மூடா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஜைடி செ ஹசான் உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவத்தில் இ-ஹெய்லிங் ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஓட்டுனருக்கும், சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு இடையில் மூண்ட வாக்குவாதமே, அவன் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயல காரணம் என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, பதின்ம வயது இளைஞன் ஒருவன், இ-ஹெய்லிங் ஓட்டுனரை கத்தியைக் காட்டி மிரட்டும் காணொளி ஒன்று, நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.