ரொம்பின், நவம்பர் 16 – நெகிரி செம்பிலான், ரொம்பின், ஜாலான் குவாந்தான் – ஜொகூர் பாரு சாலையில், கம்போங் செலாமாட்டிற்கு அருகில், சாலை சந்திப்பில் வளைய நிற்றுக் கொண்டிருந்த கார் ஒன்றை, அதே திசையிலிருந்து வந்த லோரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அக்காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.
லோரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்சாலையில் புகுந்து அங்கு வந்து கொண்டிருந்த மற்றொரு லோரியை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அவ்விபத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான 31 வயது முஹமட் அமிருல் முக்மினி மாட் டாவுட் மற்றும் 34 வயது முஹமட் ரஹ்மாட் அப்துல் ராஹிம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லோரி ஓட்டுனர்களில் ஒருவர் சிறு காயங்களுக்கு இலக்கானார்.
காரை பின்னால் இருந்து மோதிய லோரி ஓட்டுனரின் கவனக்குறைவால், அவ்விபத்து நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.