கோலாலம்பூர், டிச. 24 – அன்பை மட்டும் விதைத்துச் சென்ற இயேசுவைப் போன்று நாமும் அன்பை விதைத்து மனதை தூய்மையாக வைத்திருப்போம் என்று ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
இயேசு பிரானின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் நன்நாளாக கொண்டாடும் கிறிஸ்தவ சமயத்தவருக்கு தமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார். கிறிஸ்துமஸ் தினம் இயேசு பிறந்த நாள் மட்டுமன்றி, ஒரு புதிய நம்பிக்கையோடு புதிய ஆண்டுக்குள் அனைவரும் சிறந்து வளர்ந்தோங்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் நுழைய வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.
காலங்கள் எவ்வளவு சவால்மிக்கதாக இருந்தாலும் உறவினர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறுவதோடு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நன்னாளாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
பல்லினங்கள் வாழும் மலேசிய நாட்டில் தத்தம் சமய விழாக்களை கொண்டாடுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் நிகழ்ந்துள்ள வெள்ளம் மற்றும் பேரிடர்களை கருத்தில் கொண்டு மிதமான அளவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும். மன்னிப்பை மக்களுக்கு வழங்கிய இயேசுவின் பிறந்த நாளில் மக்களின் துன்பம் மறைந்த நாளாக இருக்க வேண்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.