ஸ்கூடாய் உணவகத்தில் நிகழ்ந்த தகராறில் கைதான இருவருக்கு 500 ரிங்கிட் அபராதம்
ஜோகூர் பாரு, பிப் 2 – ஸ்கூடாயில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்த தகராறில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 40 வயது K. சிவநாதன் மற்றும் 38 வயதுடைய S. லோகேஸ்ஆகியோருக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் ஹிடாயத்துல் ஸ்யுஹடா ஷம்ஸுடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவ்விருவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். இன்னும் தலைமறைவாக இருந்துவரும் நால்வருடன் சேர்ந்து அந்த உணவகத்தில் நடைபெற்ற தகராறில் சிவநாதனும், லோகேசும் பங்கேற்றதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 26ஆம் தேதி ஸ்கூடாய், தாமான் இம்பியான் எமாசிலுள்ள உணவகத்தில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இதனிடையே இந்த தகராறில் சம்பந்தப்பட்ட எஞ்சிய சந்தேகப் பேர்வழிகள் தேடப்பட்டு வருவதாக வட ஜோகூர் பாரு OCPD துணை கமிஷனர் பல்வீர் சிங் தெரிவித்தார். அவர்கள் மேசைகள் மற்றும் நற்காலிகளுடன் தகராறில் ஈடுபடும் 45 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.