கோலாலம்பூர், ஜனவரி 7 -ஆற்றில், முதலை ஒன்று தென்படுவதாக வெளியான காணொளியால், சிலாங்கூர், சுபாங், தாமான் பெரிண்டஸ்ட்ரியான் யு.எஸ்.ஜே. 1 பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
அந்த முதலை, பூச்சோங்கிற்கு அருகிலுள்ள ஓர் இடத்திலிருந்து ஆற்றில் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
அவ்வழியாக வந்த வாகனமோட்டி ஒருவர், அம்முதலை ஆற்றில் நுழைந்து நீந்திச் செல்லும் 25 வினாடி காணொளியை பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.
சுபாங் ஜெயா (Discover Subang Jaya) எனும் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன அந்த காணொளி வைரலாகி, சுற்று வட்டார மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
ஆற்றின் நடுவே, முதலை ஒன்று லாவகமாக ஓய்வெடுக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.
தாமான் பெரிண்டஸ்ட்ரியன் யுஎஸ்ஜே 1-க்கு அருகிலுள்ள ஆறு இது. நான் காணும் காட்சியை உங்களாலும் பார்க்க முடிகிறதா? என அந்த காணொளிக்கு கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அந்த காணொளியை கண்ட இணையப் பயனர்கள் பலர், அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.