கோலாலம்பூர், நவ 26 – ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ள அரசியல் கட்சிகள் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவுக்கான அனைத்து எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும் உறுதியாக நிராகரித்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கொள்கைகளையும் நல்லாட்சியையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதாக பி.கே.ஆர் தலைவருமான அன்வார் கூறினார். ஒர் ஆண்டு கழிந்துவிட்டன. தொடக்க கட்டத்தில் முதல் சில மாதங்களில் பின் கதவு அல்லது சூழ்ச்சியின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி எப்போதும் இருந்ததால், சிறிது நிச்சயமற்ற நிலை இருந்ததோடு எங்கள் நண்பர்களின் விசுவாசம் சோதிக்கப்பட்டது.
ஆனால், தமது நண்பர்கள் குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் இதனை முறியடித்ததால் அவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் அன்வார் தெரிவித்துக்கொண்டார்.
பிரதமராகும் வாய்ப்புகள் உட்பட அவர்களின் விசுவாசம் மற்றும் ஒற்றுமை சோதிக்கப்பட்டாலும் கூட அவர்கள் எங்கள் பங்காளிகளாக தொடர்ந்து இருக்கிறார்கள் என்று நேற்றிரவு புத்ரா ஜெயாவில் ஒற்றுமை அரசாங்கத்தின் 2,734 பேராளர்கள், 1,500 பார்வையாளர்கள் மற்றும் ஐக்கிய அரசாங்கத் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட பி.கே.ஆரின் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய கொள்கை உரையில் அன்வார் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் அனைத்து இனங்களையும் வட்டாரங்களையும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதோடு ஒற்றுமை அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் விசுவாசமாக இருந்து வருவதைப் பாராட்டுவதாக அன்வார் கூறினார்.
இதனிடையே சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஒற்றுமை அரசாங்கம் அவசரப்படாது, ஏனெனில் அது உலக வரலாறு மற்றும் 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அனுபவத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளதாகவும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.