
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாயிட் ஹமிடி, அவர் நிறுவிய அகல்பூடி (Akalbudi) அறக்கட்டளையின், நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் கள்ளப்பண மாற்றும் நடவடிக்கைகள் தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.
70 வயது கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாயிட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள தேசிய சட்டத்துறை அலுவலகம் விரும்புவதாக, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, அவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்காமல் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கொலின் லார்ன்ஸ் செக்வேரா (Datuk Collin Lawrence Sequerah) விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
முன்னதாக, அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் சாயிட்டுக்கு எதிரான வழக்கை தொடரப் போவதில்லை என கூறிவிட்டதால், குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை முழுமையாக விடுவிக்க வேண்டுமென, சாயிட்டை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டத்தோ ஹிசாம் தே போ தெக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சாயிட்டுக்கு எதிரான வழக்கு தொடர்பில், 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் எட்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதிகளில் சமர்பிக்கப்பட்ட பிரதிநிதித்துவ மனுக்கான முடிவை விரைவுபடுத்துமாறு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி, சாயிட் வழக்கறிஞர்களான டத்தோ ஹிஷாம் தே, டத்தோ அஹ்மட் ஜைதி ஜைனல் மற்றும் ஹமிடி முஹமட் நோ ஆகியோர் கோரியிருந்தனர்.
200 பக்க பிரதிநிதித்துவ விண்ணப்பத்துடன், MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கியின் கடிதத்துடன், புதிய ஆதாரங்கள் அடிப்படையில் அந்த மபு தாக்கல் செய்யப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.