கோலாலம்பூர் , பிப் 13 – கிள்ளான், காப்பாருக்கு அருகே கம்போங் தோக் மூடாவில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இலகுரக விமானம் ஒன்று அந்த இடத்தில் விபத்துக்குள்ளானதோடு அதில் இருப்பவர்களை கண்டறியும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பிற்பகல் மணி 1.56 அளவில் இது தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேடும் மீட்பு குழு உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கானும் உறுதிப்படுத்தியிருந்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் உடைந்த புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளிகளையும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.