கோலாலம்பூர், மார்ச்-22, அலுவலகக் கதவின் கைப்பிடியில் கை சிக்கிக் கொண்டதில் பெண்ணொருவர் அதிர்ச்சியும் பதற்றமமும் அடையும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளூர் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Sara எனப்படும் அப்பெண் உண்மையில் அதீத செயல்பாடு (Hyperactive) கொண்டவர் என தெரிய வருகிறது.
துருதுருவென எதையாவது செய்யும் சாரா, சம்பவத்தின் போது கதவின் கைப்பிடியோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரின் கையின் முட்டிப் பகுதி எப்படியோ கதவில் சிக்கிக் கொள்ள, அவர் கலவரமடைந்தார்.
அதைக் கண்டு பதறியத் தோழிகள், கதவுக் கைப்பிடியில் இருந்த சாராவின் கையை வெளியே இழுக்க முயற்சிப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
கையை சிறிது வளைக்கச் சொல்லி சாராவுக்கு சக ஊழியர்கள் உதவி செய்ய முற்படுகின்றனர்;
அதில் ஒருவர், “எண்ணெய் விட்டு நீவினால் கையை சுலபமாக வெளியே எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் நான் உடனடியாக எண்ணெய் வாங்க அருகில் உள்ள கடைக்கு ஓடினேன். ஆனால் நான் திரும்பி வருவதற்குள் அவளது கை எப்படியோ வெளியே வந்து விட்டது” என்றார்.
அந்த ‘கதவு சிக்கலால்’ தாம் நெட்டிசன்களின் பேச்சு பொருளாகியிருப்பதை அறிந்த சாரா, தமக்கு ஒன்றும் இல்லை, தாம் நலமாக இருப்பதாக, பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவின் கீழ் கருத்துப் பதிவிட்டு இணையவாசிகளின் கவலையைப் போக்கியுள்ளார்.
நெட்டிசன்கள் பலர் சாராவின் கை மாட்டிக் கொண்டதை அறிந்து பதறினாலும், அவர் hyperactive எனத் தெரியாமல் சிலர் கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததையும் காண முடிந்தது.
குறிப்பாக ஒருவர், ஆர்வக் கோளாறுகள் சில நேரங்களில் இப்படித்தான் முடியும் என சாராவின் உண்மை நிலையறியாது கருத்தைப் பதிவேற்றினார்.