
கோலாலம்பூர், மே 21 – தங்களது அந்நிய தொழிலாளர்களுக்கு பெர்மிட்டுக்களை பெறுவதில் சிக்கலான நடைமுறையினால் Presma எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக அச்சங்கத்தின் தலைவரான Datuk Jawahar Ali Taib Khan தெரிவித்தார். பல மாதங்களாக நாங்கள் இந்த நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். எங்களுக்கு உதவும்படி பல உறுப்பினர்கள் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதையும் Jawahar Ali சுட்டிக்காட்டினார். காலை 9 மணிக்கெல்லாம் வரிசையில் நிற்பதற்கான எண்கள் முடிவடைந்துவிடுவது குறித்தும் அவர் தெரிவித்தார்.
Shah Alam PKNS Compleks இரண்டாவது மாடியிலுள்ள சிலாங்கூர் குடிநுழைவு மையத்தின் தலைமையக அலுவலகம் திறந்தவுடன் கூட்டத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் தள்ளிக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதாகவும் வயதானவர்களுக்கு இது பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். அதிஸ்டம் உள்ளவர்களுக்கு வரிசையில் நிற்பதற்காக எண் கிடைத்துவிடுகிறது. அதற்குள் எண் முடிந்துவிட்டால் மறுநாள் வரும்படி தெரிவிக்கப்படுகிறது. மறுநாளும் இதே சூழ்நிலைத்தான் என Jawahar Ali கூறினார்.