கோலாலம்பூர், நவ 30 – மலேசிய மக்கள் தொகையில் 18.3 விழுக்காட்டினர் அல்லது 38 லட்சத்து 99,940 பேர் ( 3,899,940 பேர் ) நீரிழிவு நோய்க்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஒன்பது மாநிலங்களில் கூடுதலான விழுக்காட்டினர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தேசிய சுகாதார மற்றும் நோயற்ற ஆய்வின் 2019 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள் முலம் தெரியவருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட எழுத்துப் பூர்வமான பதிலில் டாக்டர் ஸாலிஹா கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 33.2 விழுக்காட்டினர் அல்லது 234,203 நபர்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளனர் . அதற்கு அடுத்த நிலையில் பெர்லீஸ், பஹாங்,கெடா,புத்ரா ஜெயா ,திரெங்கானு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களும் அதிக அளவில் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளதாக ஸாலிஹா தெரிவித்தார். இதனிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விவரித்தார். தொற்றா நோய்கள், சுகாதார ஆலோசனை திட்டங்கள் , சுகாதார பரிசோதனைகள் ஆகியவற்றுக்கான தேசிய செயல் முறை திட்டமும் இவற்றில் அடங்கும் என டாக்டர் ஸாலிஹா கூறினார்.