Latestமலேசியா

சீனப் புத்தாண்டை முன்னிட்டு இலவச டோல்; இம்மாதம் 8,9-ஆம் தேதிகளில் விலக்கு அளிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 7 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு, சாலை கட்டணத்தை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இம்மாதம் எட்டாம் தேதி, நள்ளிரவு மணி 12.01 தொடங்கி ஒன்பதாம் தேதி பின்னிரவு மணி 11.59 வரையில், கார்களுக்கு மட்டும் அந்த கட்டண விலக்கை பெறலாம்.

எனினும், ஜோகூர் கோஸ்வே, சுல்தான் இஸ்கண்டார் கட்டத்திலுள்ள, சாலை கட்டண சாவடியையும், ஜோகூர் லிங்கெடுவா (Linkedua) அல்லது தஞ்சோங் குபாங் சாவடியையும் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டும் அந்த கட்டண விலக்கு அளிக்கப்படாது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வாழ்க்கை செலவினங்களை குறைக்கும் வகையில், அரசாங்கம் அந்த சாலை கட்டண விலக்கை வழங்குவதாகவும் நந்தா லிங்கி சொன்னார்.

அந்த சாலை கட்டண விலகிற்காக, நான்கு கோடியே 29 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இலவச டோலை பயன்படுத்தும் வாகனமோட்டிகள், நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!