பெட்டாலிங் ஜெயா, ஜன 4 – பெட்டாலிங் ஜெயாவில் டமான்சாரா ஜெயாவுக்கு அருகே சாலை பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போலீகாரர்களில் ஒருவரை மோதி காயம் ஏற்படுத்திய சந்தேகக்திற்கரிய இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
சாலை பரிசோதனையிலிருந்த தப்பியோட முயன்றபோது அந்த சந்தேகப் பேவழிகள் தங்களது காரினால் போலீஸ்காரரை மோதியதால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, மைவி காரில் இருந்த 35 மற்றும் 45 வயதுடைய இரு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9,800 ரிங்கிட்டிற்கும் மேலான வெளிநாட்டு நாணயம் மற்றும் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொலை செய்ய முயன்றது மற்றும் கொள்ளையிடுவதற்கான கருவிகளை வைத்திருந்த குற்றத்திற்காக அந்த இரண்டு நபர்களும் ஜனவரி 8-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருதீன் அப்துல் ஹமீது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.