கோலாலம்பூர், பிப் 5 – பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டிட புளோக்கிற்கு வருகை புரிந்ததோடு செடி நடும் விழாவில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கலந்து கொண்டு உரையாற்றாமல் சென்றது குறித்து பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் ஜெ . தினகரன் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டியதில்லையென பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் A. குமரேசன் தெரிவித்திருக்கிறார். பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது தொகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு தாமும் சென்றிருந்ததாகவும் பள்ளி மேலாளர் வாரிய தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், அப்பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர்கள் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் S. சுந்தரராஜு ஆகியோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தின் தலைவருமான சுந்தரராஜு பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் கட்டிடம் தொடர்பாக கல்வி அமைச்சருக்கு விளக்கமும் தெரிவித்திருந்ததாக குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் மேம்பாட்டு திட்டத்தை பார்வையிடவும் தொடர்ந்து உதவி தொகையை வழங்குவதற்காகவே கல்வி அமைச்சர் அங்கு வந்திருந்தார். அப்படியிருக்கும்போது அவர் உரையாற்றத் தவறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஏமாற்றம் அடைந்ததாக தினகரன் அறிக்கை விட வேண்டிய அவசியமில்லை என குமரேசன் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக கல்வி அமைச்சர் 100,000 ரிங்கிட் வழங்கினார்.
அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரிடமும் அமைச்சர் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தினகரன் அப்போதே தமது ஏமாற்றம் குறித்து ஏன் தெரிவிக்கவில்லை. அந்த பள்ளியின் கட்டிடத்திற்கு தாம் கூட 300,000 ரிங்கிட் மான்யம் பெற்றுத் தந்ததாகவும் இந்த வேளையில் அந்த பள்ளிக்கு நிதியுதவி அளித்த கல்வி அமைச்சர் ஃபத்லினாவுக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாமும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாக குமரேசன் தெரிவித்தார்.