கோலாலம்பூர், பிப்ரவரி 26 – நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, மக்களவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் நல்ல முன்மாதிரியாக திகழ வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
மக்களவை மற்றும் மேலவை உறுப்பினர்கள், நாகரீகமான சொற்களை பயன்படுத்துவதோடு, ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
அந்த வரம்பை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, 14 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யும் அதிகாரத்தையும், பேரரசர், மக்களவை மற்றும் மேலவை தலைவர்களுக்கு வழங்கினார்
“நாடாளுமன்றம், சட்டங்களை இயற்றும் இடம். ஒழுங்குமுறைகளை உருவாக்கும் இடம். அதனால், சட்டங்களை வரையறுத்தவர்களே அதனை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என பேரரசர் குறிப்பிட்டார்.
மற்றவர்களை திட்டி தீர்ப்பதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியமான பேச்சைப் பயன்படுத்த வேண்டுமெனவும் பேரரசர் கேட்டுக் கொண்டார்.
15-வது நாடாளுமன்றத்தின், மூன்றாவது தவணைக்கான முதல் கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேரரசர் சுல்தான் இப்ராஹிம் உரையாற்றினார்.