கோலாலம்பூர் , ஜன 19 – பேஸ்புக் பதிவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக பதிவேற்றம் செய்யப்பட்ட பெர்னாமா தொலைகாட்சி செய்தியின் காணொளியை அகற்றுமாறு மெட்டா நிறுவனத்திடம் MCMC எனப்படும் தொடர்பு மற்றும் பல்லூட ஆணையம் கேட்டுக் கொள்ளும். சந்தேகத்திற்குரிய பெர்னாமா தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ஒருவர் இடம்பெற்றுள்ள முதலீட்டுத் திட்டம் குறித்த காணொளிப் பதிவை தாமே எம்.சி.எம்.சிக்கு அனுப்பியதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். இம்மாதிரியான மோசடி செய்பவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற காணொளிகளை உருவாக்குவது இது முதல் முறையல்ல. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் காணொளியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு மோசடி செயலும் இதற்கு முன்பு வந்திருந்தது. மேலும் அவரது பேச்சும் அதில் மாற்றப்பட்டு முதலீட்டு திட்டங்களில் பொதுமக்களை பங்கேற்க அழைப்பு விடுப்பது போல் இருந்தது என தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.