கோலாலம்பூர், நவம்பர் 30 – வங்காளதேச செய்தியாளர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும், சிறப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த கடத்தலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் இதர இரு போலீஸ் அதிகாரிகளின் நிலை, விசாரணை நிறைவடைந்ததும் முடிவுச் செய்யப்படுமென, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜித் தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனால், மேல் நடவடிக்கைகாக காத்திருப்பதாக அலாவுடின் சொன்னார்.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அம்மூவரும், உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
வங்காளதேச பத்திரிக்கையாளரை கடத்திய மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை அறிக்கை, கடந்த வாரம் அரசாங்க துணை வழக்கறிஞர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாக இதற்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, வங்காளதேச ஆண் செய்தியாளர் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மூன்று உள்நாட்டு ஆடவர்களால் கடத்தப்பட்டதாகவும், 19 லட்சம் ரிங்கிட் பிணைப் பணத்தை தருமாறு கோரி, சிலாங்கூர்,கிள்ளானிலுள்ள வீடொன்றில், அடைத்து வைக்கப்பட்டு அவர் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.