கிள்ளான், ஜனவரி 11 – சிலாங்கூர், கிள்ளானை, சேர்ந்த பொதுநலம் கொண்ட நபர் ஒருவர், தாம் வசிக்கும் பகுதியில், குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை சொந்த பணத்தில் சரி செய்துள்ளார்.
எனினும், அதன் பின்னர் தாம் சரி செய்த சாலை மீது, “டுயிட் சாயா!” அல்லது “என் பணம்!” “YB பணம் அல்ல!” என அவர் எழுதியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பழுதடைந்த சாலையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சரிசெய்ய வில்லை என்பதால், சினமடைந்த அவ்வாடவர் அவ்வாறு எழுதி வைத்தாக கூறப்படுகிறது.
அவரது நோக்கம், தாம் செய்த வேலைக்கான பாராட்டு தவறுதலாக மற்றவர்களை சென்றடைந்து விடக்கூடாது என்பதே.
அண்மையில், சாலையில் இருந்த குழியால், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு பின்னர் கூட, சம்பந்தப்பட்ட சாலையை மறுசீரமைக்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததே, அந்நபர் அவ்வாறு செய்ததற்கான காரணம் என நம்பப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான காணொளி, நாராதிவ் ராக்யாட் (Naratif Rakyat) எனும் X சமூக ஊடக கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வைரலாகியுள்ளது.
அதோடு, அந்நபரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.