ஜொகூர் பாரு, டிச 16 – குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனை நடவடிக்கையில் எட்டு நாடுகளைச் சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர். ஜோகூரில் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.
சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளில் பலர் கட்டுமான குழிகளிலும் கிரேன்களுக்கு கீழும் ஒளிந்துகொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
செடெனாக்கில் கட்டுமான பகுதியில் நேற்று மதியம் மணி 2.45 அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 56 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக பஹாருதீன் தாஹிர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் சீனா, பாகிஸ்தான் , வங்காளதேசம், இந்தோனேசியா, மியன்மார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என அவர் கூறினார்.
இதனிடையே குளுவாங்கில் தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த 23 பேர் உட்பட 47 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.